திருவள்ளூர்: கடம்பத்தூர், ஆவடி பகுதிகளில பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏக்கள் ஆவடி நாசர், வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் கா.குமாரிகுட்டி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் வி.ராஜசேகர் வரவேற்றார். துணைத் தலைவர் சேகர், பொருளாளர் வேதாச்சலம், துணை செயலாளர் சங்கர், உதவி தலைமை ஆசிரியர்கள் ஜாய்ஸ்ராணி, பவுன்ராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரம்யா, கல்வியாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 163 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் திமுக மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், ஒன்றிய செயலாளர் க.அரிகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வி.எஸ்.நேத்தாஜி, ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், துணைத் தலைவர் ஜெய்சங்கர், வார்டு உறுப்பினர் கிரிஜா உதயமூர்த்தி, வியாபாரிகள் சங்கத் தலைவர் பிராங்கிலின், உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சேகர், நா.பிரசன்னகுமார், மாலதி வாசன், முன்னாள் தலைமை ஆசிரியர் கந்தசாமி, கருணாநிதி, வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய மாணவர்படை அலுவலரும், ஓவிய ஆசிரியருமான சா.அருணன் நன்றி கூறினார்.
ஆவடி: ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் 274 விலையில்லா மிதிவண்டிகள், ஆவடி, விஜயந்தா மேல்நிலைப் பள்ளியில் 324 மிதிவண்டிகள் என மொத்தம் 598 மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், தலைமை ஆசிரியர் கலியபெருமாள், 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயப்பிரியா சரவணன், கமலேஷ், நரேஷ், வட்டச் செயலாளர் ராஜி அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.