கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட 12 வயது மாணவியை பயிற்சியாளரும், முன்னாள் நாதக நிர்வாகியுமான சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் விஷம் குடித்ததால் மருத்துவமனையில் இறந்தார்.
தொடர் விசாரணையில், போலி முகாம் மூலம் கிருஷ்ணகிரி அருகே வேறு ஒரு தனியார் பள்ளியில் 14 வயது மாணவி பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பெண் முதல்வரும், சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்த மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியருமான கோபு, முகாம் குறித்த தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை எரித்த முன்னாள் நாதக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே போலி என்.சி.சி., முகாம் நடந்ததை மறைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி ஆசிரியர் கோபுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார். இந்நிலையில், சிவராமனின் நெருங்கிய நண்பரும், அவரது குற்றச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்த, காவேரிப்பட்டணம் கொசுமேடு பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டரும், மதபோதகருமான டேனியல் அருள்ராஜை(43) சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்தனர்.