இதைத் தொடர்ந்து, கடந்த 1ம் தேதி செவ்வாய்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும், பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை குறித்து தலைமை ஆசிரியர், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். மேலும், பள்ளி மாணவிகளிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினர் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் அங்கிருந்த சில மாணவிகள், தங்களிடம் கணித ஆசிரியர் ஜெகதீசன், சமூக அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரும் தவறாக பார்ப்பதும், பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின்பேரில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிக்கை பெற்றார். பின்னர், அது ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகம் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களும் நேற்று மாலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டது.