Thursday, June 27, 2024
Home » பள்ளிக்கு வனத்துறை வாகனங்களில் பழங்குடியின குழந்தைகள் பயணம்

பள்ளிக்கு வனத்துறை வாகனங்களில் பழங்குடியின குழந்தைகள் பயணம்

by Lakshmipathi

*அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் நேற்று வனத்துறை வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு மீண்டும் வீடுகளுக்கு கொண்டு வந்து விடப்பட்டனர். இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும், இங்கிருந்து பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவிகளுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு வாரங்களுக்கு முன் கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானைகளை விரட்டி கண்காணிக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர். மேலும் அவர்களின் பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக வனத்துறை வாகனங்களில் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லவும் உறுதி அளித்தனர். இந்நிலையில் நேற்று முதல் விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கியுள்ள நிலையில் நேற்று இப்பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள் வனத்துறை வாகனங்களில் அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதேபோல் மாலையில் மீண்டும் அதே வாகனங்களில் அழைத்து வரப்பட்டு வீடுகளில் சேர்க்கப்பட்டனர். தற்போது மழைக்காலம் தூவங்கி உள்ளதாலும் பனி மூட்டம் காணப்படுவதாலும் யானைகள் நடமாட்டத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதி படி பள்ளிக்கு செல்லும் பழங்குடியின மக்களின் குழந்தைகளை வனத்துறை வாகனங்களில் அழைத்து சென்று மீண்டும் மாலையில் வீடுகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கூடலூர் கோட்டை வன அலுவலர் உத்தரவுப்படி வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டு குவிந்துள்ளது.

You may also like

Leave a Comment

6 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi