அதன்படி, மார்ச் 12ம் தேதி மாலை தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. அவை அனைத்தும் கடந்த 14ம் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதே சமயம், எஸ்பிஐ வெளியிட்ட தகவலில் தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற வில்லை. இதையடுத்து அந்த விவரங்களையும் வெளியிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 21ம் தேதி தேர்தல் பத்திரங்கள் பற்றி எஸ்பிஐ வங்கி வெளியிட்ட முழுவிவரத்தையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. அந்த தகவல்கள் மூலம், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஆளும் பாஜ கட்சி சுமார் ரூ.8,250 கோடி வரை நன்கொடை பெற்றிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, பல நிறுவனங்களை பாஜ கட்சி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ரெய்டு மூலம் மிரட்டி தேர்தல் நன்கொடை வசூலிப்பதிருப்பதும் ஆதாரப்பூர்வமாக வெளியானது. பாஜவுக்கு நன்கொடை தந்த நிறுவனங்கள், ரெய்டை தொடர்ந்து அடுத்த சில வார, மாத இடைவெளியில் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பது அம்பலமானது.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் திட்டம் ரத்து செய்யப்பட்ட தேதியான கடந்த பிப்ரவரி 16 வரை மொத்தம் ரூ.12,156 கோடி மதிப்பிலான 18,871 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் 1,316 நிறுவனங்கள் அல்லது தனிநபருக்கு விற்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 24 அரசியல் கட்சிகள் மொத்தம் 20,421 தேர்தல் பத்திரங்களை இந்த காலகட்டத்தில் வங்கியில் டெபாசிட் செய்து ரூ.12,769 கோடியை பணமாக்கி உள்ளன. அதாவது எஸ்பிஐ வங்கி விற்ற தேர்தல் பத்திரங்களை விட ரூ.613 கோடி அதிக மதிப்புள்ள பத்திரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளன. மொத்தம் 1,550 தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் கூடுதலாக டெபாசிட் செய்திருக்கின்றன. இந்த தேர்தல் பத்திரங்கள் எங்கிருந்து வந்தன. அதை வாங்கிய நிறுவனங்கள் யார் என்ற விவரம் எஸ்பிஐயால் வெளியிடப்படவில்லை. கணக்கில் வராத தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ அதிகபட்சமாக ரூ.466 கோடி பெற்றுள்ளன. இந்த தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்ற கணக்கு எங்கே? என்று அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக இணையதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.