Monday, September 16, 2024
Home » 3 நாளில் சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது முன்கூட்டியே தங்க நகை வாங்க கடைகளுக்கு மக்கள் படை எடுப்பு: அதிரடியாக விலை குறைந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை

3 நாளில் சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது முன்கூட்டியே தங்க நகை வாங்க கடைகளுக்கு மக்கள் படை எடுப்பு: அதிரடியாக விலை குறைந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை

by Karthik Yash

சென்னை: தங்கம் விலை கடந்த 3 நாளில் சவரனுக்கு ரூ.3,040 அதிரடியாக குறைந்துள்ளதால், தங்கம் வாங்க நகை கடைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். தங்க வரலாற்றில் இந்த அளவுக்கு விலை குறைந்தது இதுவே முதல்முறை என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை, ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்துக்கு விற்கப்பட்டதால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை கணிசமான அளவு குறைந்தது. இந்த காரணங்களால் 3-வது நாளாக தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 23ம்தேதியில் ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ. 275-ம், சவரனுக்கு ரூ.2,200ம் குறைந்தது. இது தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல்முறை என்று வியாபாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தங்கம் விலை இறங்குமுகத்திலேயே இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து நேற்றும் 3வது நாளாக ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3040 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள நகை கடைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்புக்குப் பிறகு இந்திய சந்தையில் தங்கத்தின் தினசரி தேவை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை, வரி குறைப்பால் இந்தியாவில் திடீரென அதிகரிக்கும் தங்க தேவையின் காரணமாக, வெளிநாட்டில் இருந்து அதிகப்படியாக இறக்குமதி செய்யப்படும் என்றும், இதன் மூலம் அரசின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற அச்சமும் உள்ளது. இதனால் ஒன்றிய அரசு வரியை மீண்டும் உயர்த்தும் என்ற அச்சமும் இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

nine + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi