சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சவர தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசின் கல்வி நிறுவனங்களில் வேலை, மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்றங்களிலும் மருத்துவ சமுதாயத்தின் குரல் ஒலிக்கும் வகையில் உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இலவச மருத்துவ கல்வி வழங்க வேண்டும்.
கிராமபுறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் எம்.முனுசாமி தலைமை தாங்கினார். பொது செயலாளர் டி.கே.ராஜா, மாநில பொருளாளர் எஸ்.நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.