ஊத்துக்கோட்டை: பெண்ணிடம் 3 சவரன் தாலிச்செயினை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே மாம்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி சரளா (46). இவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூனிப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சரளாவின் கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கத்தாலிச் செயினை பறித்துக் கொண்டு சென்றனர். இதுகுறித்து சரளா பென்னலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து செயின் பறிப்பு ஆசாமிகளை தீவிரமாக தேடுகின்றனர்.