சென்னை: சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டு உண்மை என்றால், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கூறினார். அகில இந்திய காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவரும், செய்தி தொடர்பாளருமான சுப்ரியா ஸ்ரீனேட் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது: புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வெளியிட்ட பரபரப்பான தகவல்கள் வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டன.
ஆனால், இதுவரை மோடி அரசிடமிருந்து எவ்விதமான பதிலும் இல்லை. சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு உண்மை என்றால், இதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் நீடிக்க மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது. பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் ராஜினாமா செய்யக் கோருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.