புதுடெல்லி: தமிழக முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்ற மதுரை கிளை சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும் விடுதலையான பின்னரும் அவதூறு கருத்துக்களை மீண்டும் பதிவிட்டதால் வழங்கப்பட்ட ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சாட்டை துரைமுருகன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்,’சாட்டை துரைமுருகன் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே பல்வேறு அவதூறு கருத்துக்களை தெரிவித்து குற்றச்செயலில் ஈடுபட்டார். அதனை அடிப்படையாக கொண்டு தான் உயர்நீதிமன்ற மதுரை கிளை அவரது ஜாமீனை ரத்து செய்தது’ என தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி, விசாரணையை வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.