Wednesday, August 21, 2024
Home » சங்கடங்கள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்

சங்கடங்கள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்

by Porselvi

சக்கரத்தாழ்வார் ஜெயந்தி – 14-7-2024

ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி

ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப் படும். இவரை தரிசித்தாலே பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சு என்றால் நன்மை, புனிதம் என்று பொருள். தரிசித்தால் நன்மையும் செல்வமும் தரக்கூடியவர் என்பதால் இவருடைய திருநாமமே சு+தர்சனம்= சுதர்சனம் ஆயிற்று. ஆயுதங்களில் திருக்கையில் இருந்து நீங்கி, எதிரியை வீழ்த்தி விட்டு திரும்பவும்பெருமாள் திருக்கரம் வந்து சேரக்கூடிய ஒரே ஆயுதம் இந்த சக்கரமே. இந்த ஆண்டு சக்கரத்தாழ்வார் ஜெயந்தி பெருமாளுக்குரிய புதன்கிழமை வருகிறது. நரசிம்மர் மற்றும் சக்கரத்திற்குரிய செவ்வாய் நட்சத்திரமான சித்திரையிலும், நரசிம்மருக்குரிய ஸ்வாதியிலும் வருகிறது.

ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர்

பெருமாளின் ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர் ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனர். எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத்திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனர், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறார். அவர் அருளால் சித்திக்காதது எதுவுமில்லை. பெருமாளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், சக்கரத்தாழ்வாரின் பெயரை, தன்னுடைய திருநாமமாகக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். ‘‘ஆழியான்’’ என்று பெருமாளுக்குப் பெயர். சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்குகளான எண்ணிக்கையில் 6, 12, 24, 48 என்று வலம் வருதல் நலம். சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும் (தர்மச் சக்கரம்) இருப்பது, இதன் சிறப்பு.

ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி

சில கோயில்களில் ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோகூர் திருத்தலங்களில் ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருமோகூரில் எழுந்தருளியுள்ள காளமேகப் பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர். சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம். அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது இங்கு மட்டுமே. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதிதேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று நேத்ரங்களுடன், சிரசில் அக்னி க்ரீடம் தாங்கி, பதினாறு கரங்கள்-பதினாறு திவ்யாயுதங்களுடன் ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மர் காட்சி தருகிறார்.

திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் தம்முடைய முதல் பதிகத்திலேயே, ‘‘ஆழியான் அருளால், எனக்கு நாராயண நாமம் கிடைத்தது. அந்த நாராயண நாமத்தால் மற்ற எல்லாம்
கிடைத்தன’’ என்று பாடுகின்றார்.
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.

சுதர்சன ஆழ்வார்

எம்பெருமானிடத்திலே ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை ஆழ்வார்கள் என்று அழைப்போம். சுதர்சனர் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அகலாத பக்தி கொண்டு ஆழ்ந்து இருப்பதால் இவரை சுதர்சன ஆழ்வார் என்று அழைப்பார்கள். சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன. இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்சனம் மூலமே நிகழ்த்தி அருளினார். உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர். எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப் பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம்.

வெற்றி வீரர்

ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையவர். வெற்றி வீரர். பெருமாள் நினைத்ததை நிறைவேற்றிக் கொடுப்பவர். அடியார்களை அனவரதமும் ரசிப்பவர். சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம் என்றும் போற்றுவர். சக்கரத்தானை திருவாழியாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு ‘‘ஹேதிராஜன்” என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

பெரியாழ்வார்

ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார். திருமழிசையாழ்வார் சங்கு சக்கரத்தோடு பெருமாள் நிற்கக்கூடிய அழகை, ‘‘வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்” என்ற பாடலில் குறிப்பிடுகின்றார். தமது திருச்சந்த விருத்தத்திலும் நான்முகன் திருவந்தாதியிலும் சக்கரத்தாழ்வாரைப் போற்றுகின்றார்.
தேருங்கால் தேவன் ஒருவனே,
என்றுரைப்பர்
ஆருமறியார் அவன்பெருமை, – ஓரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்
செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால்.

“அருள் முடிவது ஆழியான் பால்” என்று பாடி, அப்படிப்பட்ட “ஆழியான் பெருமையை யார் அறிவார்?” என்றும் போற்றுகின்றார். ஆழி என்கின்ற சொல்லுக்கு சக்கரம் என்று ஒரு பொருள். கடல் என்று ஒரு பொருள். இரண்டுமே எம்பெருமானுக்கு சேர்த்தியாக இருப்பது. பெரியாழ்வார் ‘‘வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று இவரை வாழ்த்துகிறார். மேலும் “என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு” என்று குறிப்பிடுகிறார். ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில், ‘‘சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் “என்றே பெருமாளை பாடுகிறார். நம்மாழ்வார்” சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று பாமாலை சூட்டுகிறார். ‘‘சுதர்சனாஷ்டகம்’’ என்ற ஸ்தோத்ர மாலையிலும் இவரை போற்றியுள்ளார்!

எந்த தீய சக்தியையும் அழிக்கவல்லவர்

ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் சேவித்து சந்நதி வலம் செய்தால், நமக்கு நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்டலட்சுமிகளையும், எட்டு திக்குகளையும் வணங்கிய பலனுடன், பதினாறு வகையான பேரருளும் கிட்டும். உலகில் உள்ள எந்த தீயசக்தியையும் எதிர்த்து அழிக்கவல்லவர், இந்த மஹா சுதர்ஸனர்! மந்திர தந்திர யந்திர அஸ்திர சஸ்திர ஆகிய அனைத்தையும் அழித்து நல்லோரை துயரிலிருந்து காக்கவல்லவர் மஹாசுதர்ஸனர். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார்.

நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும்

ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். அவர் அவதார தினத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் தரிசிக்கும் போது அவருடைய காயத்திரி
மந்திரம் சொல்வது சிறப்பு.
ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்னோ: சக்ர ப்ரசோதயாத்

எங்கே தொடக்கம் எங்கே முடிவு

ஆனால், எங்கே தொடக்கம் எங்கே முடிவு என்பது தான் யாருக்கும் தெரியாது. இது இறை தத்துவத்தைக் குறிக்கிறது. இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். வாழ்க்கைப் பயணத்தின் ஒரே மாதிரி எதுவும் இருந்தது இல்லை. எந்த சரித்திரமும் ஒரு உச்சிக்குச் சென்று பிறகு வீழ்ச்சி அடைந்து விடும். எந்த வீழ்ச்சியும் அதுல இருந்து ஒரு உச்சிக்குச் சென்று விடும். சக்கரத்தின் புள்ளிக்கு கீழேதொட்டு மறுபடி சுழலும்போது அது உச்சிக்குச் சென்று மறுபடி இறங்கும். சகட யோகம் என்பார்கள். நிலையற்ற நிலை. அது தானே பெரும்பாலானவர்க்கு வாழ்க்கை. உச்சிக்குச் செல்வதும் கீழே இறங்குவதுமாக இருந்தால்தான் சக்கரம் சுழல்வது என்று பொருள்.

ஜோதிடத்தில் சுதர்சனர்

12 ராசிகள் இருக்கட்டும், கிழமைகள் இருக்கட்டும், ஒரு நாளின் நேரமாக இருக்கட்டும், எது முடியுமோ அங்கே இருந்துதான் தொடக்கம். அந்த நாளின் முடிவும் அடுத்த நாளின் தொடக்கமும் ஒரே புள்ளிதான். நம்முடைய உடம்பும் அப்படித்தான். ஒவ்வொரு நிமிடமும் செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன. இவை இரண்டும் நடந்தால்தான் ஒரு மனிதன் உயிரோடு இருக்கின்றான்; இயங்குகின்றான் என்று பொருள். ஆனால் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை அதைப்போலவே சக்கரம் வேகமாகச் உழலுகின்ற பொழுது நீங்கள் சக்கரத்தை உற்று கவனித்தால் அதனுடைய சுழற்சி உங்கள் கண்களுக்கு தெரியாது அது நிற்பது போலவே தெரியும் அதைப் போலவே இந்த வாழ்க்கையும் வேகமாக சுழல்வதை நாம் உணர்வதில்லை

சக்கரத்தின் தத்துவம்

ஜனனமும் மரணமும் கூட ஒரு சக்கரத்தைப் போலத்தான். ஆதிசங்கரர் புனரபி ஜனனம் புனரபி மரணம் பாடினார். ஒரு மனிதன் தூங்கப் போகும்போது அவன் விழித்து இருப்பதில்லை விழித்திருக்கும் பொழுது அவன் தூங்குவதில்லை ஆனால் இவை இரண்டுமே அவன் வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவன் கனவு காண்கின்ற பொழுது அது நினைவாக இருப்பதில்லை. அவன் நினைவில் இருக்கின்ற பொழுது அவன் கனவு காண்பதில்லை. இவை இரண்டும் இரண்டு புள்ளிகள் என்று சொன்னாலும் கூட, ஒரு புள்ளியின் தொடக்கத்திலேயே அடுத்த புள்ளியும் பொருந்தி இருக்கிறது, அதுதான் சக்கரத்தின் தத்துவம். உறக்கத்தின் முடிவு விழிப்பு. விழிப்பின் முடிவு உறக்கம். திருவள்ளுவர் இதை மிக அழகாகச் சொல்லுவார். மரணம்கூட தத்துவத்திற்கு உட்பட்டதுதான். உறங்குவது போல சாக்காடு உறங்கி விழிப்பது போல பிறப்பு என்று மிக அழகாகச் சொல்லுவார். இந்த சக்கரத்தின் உடைய தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால்வாழ்க்கை குழப்பமின்றி இனிதாக இருக்கும்.

சுழலச் செய்பவன் இறைவன்

எல்லாவற்றையும் இயக்குபவன் எம்பெருமான். சக்கரம் எப்பொழுதும் தானாகச் சுற்றுவதில்லை. அதைச் சுழலச் செய்வதற்கு ஒரு ஆற்றல், ஒரு மையப்புள்ளி, ஒரு அச்சாணி, வேண்டும். அதை சுழலச் செய்பவன் தான் இறைவன். அண்ட சராசரங்கள் அனைத்தும் சுழன்று கொண்டே இருக்கின்றன என்றுதான் விஞ்ஞானமும் சொல்லுகின்றது.இயக்கம் சுழற்சி இல்லாது போனால் அவை இல்லை என்று பொருள். நட்சத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பூமியை எடுத்துக் கொள்ளுங்கள். சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள். அண்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள். எதை எடுத்துக் கொண்டாலும் அந்தரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கின்றன. காரணம் அதற்கென்று ஒரு விசையை எம்பெருமான் கொடுத்திருக்கின்றான்.

பிரளயத்தில் உலகைத் தாங்குகிறார்

ஸ்ரீமந் நாராயணனுக்கு இரண்டு சக்திகள் உண்டு.1. இச்சா சக்தி(விருப்பம்) 2. க்ரியா சக்தி(செயல்)இச்சாசக்தியாகத் திகழ்பவள் அகலகில்லேன் என்று அவன் மார்பில் உறையும் ஸ்ரீமஹாலட்சுமீ தாயார்! க்ரியா சக்தியாகத் திகழ்பவர்தான் ஸ்ரீசுதர்சநத்தாழ்வார்! எம்பெருமானின் நினைப்பதை நிறைவேற்றுபவர் சக்கரத்தாழ்வார்! சுதர்சனமே எல்லாவற்றிற்கும் ஆதாரம்! பிரளய காலத்தில் எம்பெருமான் இந்த லோகத்தை தன்னுள் ஒடுங்கச் செய்கிறான். இதனை லயம் என்பார்கள். உயிர்கள் அழியாத அந்த நிலையில் இந்த சித்தும் அசித்தும் மஹாராத்ரி என்ற ஸங்கல்பத்தால் தாங்கப்படுகிறது!
மஹாராத்ரிதரம்தான் சுதர்சனர்.

சுதர்சன சக்கரத்தில் பல வகைகள்

சுதர்சன சக்கரத்தில் பல வகைகள் உண்டு. இரண்டு அரங்கள் கொண்டது. உஷஸ் சக்ரம்! மூன்று ஜ்ஞான ஸ்வரூபமாக இருப்பது உதய சக்ரம். ஆறு அரங்கள் கொண்டது விஷ்ணு சக்ரம்! எட்டு அரங்கள் கொண்டது நாராயண சக்ரம்! 32,100 ஆரங்களும் உண்டு! இது தவிர ஐச்வர்ய சக்ரம், மஹாசக்ரம், மஹா சுதர்ஶன சக்ரம், ஸஹஸ்ரார சக்ரம் என்றெல்லாம் உண்டு! இந்த மஹா சுதர்சன சக்ரமானது, 12 அரங்களுடன் இருக்கும்! ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் வீற்றிருக்கும் இடமானது ஆயிரம் அரங்களுடன் கூடிய எம்பெருமானின் ஸங்கல்பமான ஸ்ரீசுதர்ஸனத்தால் தாங்கப்படுகிறது!!!

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்?

சுதர்ஸனரின் பின்புறம் யோக நரசிம்ம மூர்த்தியைக் காணலாம். இவரை சுதர்ஸன நரசிம்மம் என்பர். பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார். நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம். நாளையென்பது நரசிம்மருக்கு கிடையாது என்பர். துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும்ஒரு சேர வழிபடுவது மிகச் சிறப்பு. இதன் அடிப்படையில்தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.

சக்கரத்தாழ்வார் ஸ்லோகம்

இந்தச் ஸ்லோகத்தை தினசரி சொல்வதன் மூலம் சக்கரத்தாழ்வாரின் பரிபூரண அருளைப் பெறலாம்.
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா…
மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளை யெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார்.

சக்கரத்தாழ்வார் பற்றி ஜோதிட ரகசியங்கள்!

பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால், சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. பெரியாழ்வார் வடிவார் சோதி ‘‘வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’’ என்று வாழ்த்திப் பாடியுள்ளார். சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார். மகா விஷ்ணுவின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். ராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார். சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, ‘‘நானே உண்மையான வாசுதேவன்’’ என்று பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியினால் அவனை வென்றான்.

You may also like

Leave a Comment

3 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi