மணல் குவாரி பிரச்சனை வழக்கு; அமைச்சர் சிவசங்கர் கடலூர் கோர்ட்டில் ஆஜர்: 22ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடலூர்: மணல் குவாரி பிரச்சனை வழக்கில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசி நல்லூருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கும் இடையே வெள்ளாறு உள்ளது. இங்கு அரசு மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரி தங்களுக்கு தான் சொந்தம் என்று சன்னாசிநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் கூறி வந்தனர். இதனால் இரண்டு மாவட்ட வருவாய்துறையினரும் அங்கு சென்று மணல் குவாரியை அளந்து இரு பிரிவினருக்கும் பிரித்துக் கொடுத்தனர்.

ஆனால் அதற்கு சன்னாசிநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் ஒப்புக்கொள்ளவில்லை.இதன் காரணமாக கடந்த 2015ம் ஆண்டு சன்னாசிநல்லூர் பொதுமக்கள் மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டார்.இந்த போராட்டத்தின் போது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜவகர், விசாரணையை வருகிற 22 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related posts

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது