Wednesday, September 25, 2024
Home » மணல் குவாரி அனுமதி பெற்று தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி அதிமுக கவுன்சிலருக்கு வலை; 3 பேர் கைது: தொழிலதிபர் தற்கொலை முயற்சி

மணல் குவாரி அனுமதி பெற்று தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி அதிமுக கவுன்சிலருக்கு வலை; 3 பேர் கைது: தொழிலதிபர் தற்கொலை முயற்சி

by Ranjith

மதுரை: அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி பெயர்களைப் பயன்படுத்தி கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.6.80 கோடி மோசடியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 2 பேரை தேடுகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (51). அப்பகுதியில் கல் குவாரி நடத்தி வரும் இவருக்கு, மதுரை நேரு நகரைச் சேர்ந்த சங்கரி என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமானார்.

தனக்கு மதுரையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி நெருக்கமானவர்கள். அவர்கள் மூலம் எந்த வேலையாக இருந்தாலும் முடித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். பேஸ்புக்கிலும் செல்லூர் ராஜூ குறித்த படங்களை தொடர்ந்து பதிவிட்டதால் இதனை நம்பிய சரவணன், தனக்கு மணல் குவாரி எடுக்க உதவும்படி கேட்டுள்ளார். இதன்பேரில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கடந்த 2020 மார்ச்சில் திண்டிவனத்திற்கு சங்கரி, செல்வம், மகா, மாரி ஆகியோர் சரவணனை சந்தித்தனர்.

அவர் போனில் செல்லூர் ராஜூவுடன் பேசுவதுபோல பேசி, சரவணனிடமும் போனை கொடுத்துள்ளார். அதில், செல்லூர் ராஜூ போலவே பேசியவரும் உதவுவதாக தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்கு பிறகு முன்பணமாக ரூ.25 லட்சத்துடன் மதுரைக்கு, சரவணனை சங்கரி வரவழைத்தார். 2020 ஏப்ரலில் மதுரையில் சங்கரியுடன், அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன், அங்கிருந்த பிருந்தா, செல்லூர் ராஜூவின் உறவினர் என அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்.

காரில் சரவணனை அழைத்துச் சென்று செல்லூர் ராஜூ வீட்டில் இல்லை என திரும்ப அழைத்து வந்துள்ளனர். இப்படியாக, அதிமுக கவுன்சிலர் மாயதேவன், சங்கரி மற்றும் பிருந்தா ஆகியோரிடம் சரவணன் ரூ.1 கோடி வரை கொடுத்துள்ளார். சில நாட்களில் சரவணனை தொடர்பு கொண்டு பேசிய சங்கரி, பிருந்தா கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், அவரிடம் சரவணன் தான் இறுதியாக பேசியவர் என்பதால் கொலை வழக்கில் போலீசார் அவரையும் சந்தேகப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், இந்த வழக்கில் இருந்து தப்ப வைக்க செல்லூர் ராஜூ, மாயத்தேவன் நினைத்தால்தான் முடியும் எனக் கூறி, அதற்கு தான் உதவுவதாக தெரிவித்து தொடர்ந்து பணம் பறித்ததாக தெரிகிறது. இப்படி அடிக்கடி பேசி, சரவணனிடமிருந்து ரூ.6.80 கோடி வரை பணம் பெற்றுள்ளனர். இதையடுத்து தான் கொடுத்த பணத்தை கேட்டபோது அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரவணன் கொடுத்த புகாரின்பேரில், கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் பணம் திரும்ப கிடைக்காததால் மனமுடைந்த சரவணன், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மதுரை மத்திய குற்றத் தடுப்புப்பிரிவினர், மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 27வது வார்டு அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன், சங்கரி, செல்வம், மகா, மாரி ஆகிய 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, சங்கரி, மகா மற்றும் செல்வத்தை கைது செய்தனர். தலைமறைவான கவுன்சிலர் மாயத்தேவன் மற்றும் மாரியை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi