இந்த சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வௌியுறவு துறை அமைச்சர் மேத்யூ மில்லர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘சனிக்கிழமை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை தாக்கி தீ வைத்த சம்பவத்தை அமெரிக்க கடுமையாக கண்டிக்கிறது. அமெரிக்காவில் உள்ள தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு எதிரான வன்முறை கிரிமினல் குற்றமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
* தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு உறுதி – கனடா
ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கூட்டாளி நாடுகள் காலிஸ்தானியர்களின் தீவிரவாத சிந்தாந்ததுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் அவை நமது உறவுக்கு நல்லதல்ல” என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் கனடாவின் வெளியுறவு துறை அமைச்சர் மெலானி ஜோலி,‘‘ தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் கனடா உறுதியாக இருக்கிறது. தூதர்களின் பாதுகாப்பு குறித்த வியன்னா உடன்படிக்கையின் கீழ் கனடா தனது கடமைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. 8ம் தேதி திட்டமிடப்பட்ட காலீஸ்தானியர்களின் போராட்டம் தொடர்பாக ஆன்லைனில் பரப்பப்படும் சில விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்பதால் இந்திய அதிகாரிகளுடன் கனடா நெருங்கிய தொடர்பில் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.