மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் இயக்குநர் சமீர் வான்கடே, பாலிவுட் நடிகரிடம் ரூ.25கோடி லஞ்சம் கேட்ட ஊழல் வழக்கு தொடர்பாக 2வது நாளாக நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். சொகுசு கப்பலில் போதைப்பொருள் கடத்தியதாக இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேரை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநராக இருந்த ஐஆர்எஸ் அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.
இதில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் வான்கடே மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை நேரில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரித்தனர். இந்நிலையில், 2வது நாளாக வான்கடே பந்த்ரா -குர்லா காம்ப்ளக்சில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆஜரானார். நேற்றும் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்தது.