சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி துவங்கியது

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி துறைசாமி ராஜூ முன்னிலையில், பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி துவங்கியது. தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை 2021-2022 மானிய கோரிக்கையின் போது , அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவித்தார்.

இப்பணிகளுக்காக இந்து சமய அறநிலையதுறை சார்பில், தமிழ்நாடு 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 365 கிலோ தங்க நகைகள், கோயில் உபயோகத்திற்கு தேவையில்லாத கல், அரக்கு, அழுக்கு போன்றவற்றை நீக்கி நிகர தங்கங்களை தரம் பிரித்து எடை போடும் பணி தற்போது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராஜு தலைமையில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பாபு மாலா முன்னிலையில் கோயில் அலுவலக வளாகத்தில் துவங்கியது.

மூன்று மண்டல செயல் அலுவலர்கள்,சமயபுரம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர்முன்னிலையில் 25க்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஆணை கிடைத்தவுடன், தங்கங்கள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி மூலம், மும்பை அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதற்கான தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி கோயிலுக்கு வழங்கும். இதிலிருந்து கிடைக்கும் வட்டி, கோயில் வருவாயில் சேர்க்கப்படும் என நீதிபதி ராஜூ தெரிவித்தார். தங்கம் எடை போடும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related posts

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்