Saturday, September 21, 2024
Home » தமிழ்நாட்டிற்கு ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு தர வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு தர வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by MuthuKumar

சென்னை: தமிழ்நாட்டிற்கு ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில், ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. நாட்டின் கல்வி துறையில், ஒன்றிய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தின்கீழ் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது மிகவும் அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு நிதி விடுவிக்கப்படுகிறது. அதன்படி, 2024-2025ம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு ₹3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்கு ₹2,152 கோடி (60 விழுக்காடு). ஒன்றிய அரசின் அந்த பங்களிப்பினை பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024-லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான 573 கோடி ரூபாயினை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, முந்தைய ஆண்டுக்கான ₹249 கோடியையும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.

இதற்கு முன்பும், தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய கல்வி அமைச்சருக்கு தான் கடிதம் எழுதிய பின்னரே நிலுவையில் உள்ள நிதியில் ஒரு பகுதி கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஒன்றிய அமைச்சரை சந்தித்து, உரிய நேரத்தில் மானியங்களை விடுவிக்க கோரி ஜூலை மாதம் கோரிக்கை வைத்த நிலையிலும், இதுவரை ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்தில், பி.எம். பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது தெரிய வந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை 2020-ல் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பி.எம்.. பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தமிழ்நாடு போன்ற முன்னோடி மாநிலங்கள், பள்ளி கல்வியிலும், உயர்கல்வியிலும் பல சிறப்பான புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. பிராந்திய அடிப்படையில் சமூக-பொருளாதார நிலைமைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும்போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும். ‘சமக்ரா சிக்ஷா’ என்கிற ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியினை நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய நிலையில் வாழும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும். இத்தகைய நடவடிக்கை ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் நோக்கமான ‘எந்தவொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது’ என்பதற்கு எதிரானது.

எனவே, ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை உடனடியாக விடுவித்திட பிரதமர் நரேந்திர மோடி இதில் நேரடியாக தலையிட வேண்டும். விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

12 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi