மும்பை: சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு வழக்கில் 1,735 பக்க குற்றப்பத்திரிகையை மும்பை குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அபார்ட்மென்ட்டுக்கு வெளியே ஒரு கும்பல் நின்றிருந்தனர். அவர்கள் சல்மான் கான் வீட்டை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இவ்வழக்கில் வடமாநிலங்களைச் சேர்ந்த 6 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் சல்மான் கானுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்து தற்போது சிறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயின் மீதும் வழக்குபதியப்பட்டது. இவரது உத்தரவின் பேரில் தான், சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வழக்கு தொடர்பாக சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர் அர்பாஸ் கான் ஆகியோரின் வாக்குமூலத்தை கடந்த ஜூன் 4ம் தேதி போலீசார் பதிவு செய்தனர். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சல்மான் கானின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், தேடப்படும் 3 குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 1,735 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 46 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 22 தொழில்நுட்ப ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.