Thursday, September 19, 2024
Home » சாலிகிராமம் பகுதியில் பரிதாபம் ஆன்லைன் ரம்மியில் பல லட்சத்தை இழந்த தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை: மகன், மகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்

சாலிகிராமம் பகுதியில் பரிதாபம் ஆன்லைன் ரம்மியில் பல லட்சத்தை இழந்த தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை: மகன், மகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்

by Ranjith

சென்னை: ஆன்லைன் ரம்மியில் பல லட்சத்தை இழந்ததால் மனமுடைந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் தனது மகள் மற்றும் மகனுக்கு ‘தனது இறுதி நாள்’ என செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாலிகிராமம் தேவராஜ் நகர், சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (51). தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி ஆஷா, மகள் ஸ்ரீலேகா மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகள் ஸ்ரீலேகாவுக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி மனைவி ஆஷா, மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் கிருஷ்ணமூர்த்தி மட்டும் இருந்துள்ளார். பிறகு மறுநாள் பணிக்கு சென்று மதியம் வீட்டிற்கு வந்த அவர், அதன் பிறகு அலுவலகத்திற்கு செல்லவில்லை. பின்னர் கிருஷ்ணமூர்த்தி தனது மகள் மற்றும் மகன் செல்போனுக்கு ‘தனது இறுதி நாள்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை பார்த்த அவரது மகன் வீட்டின் எதிரே உள்ள நண்பர் சுதாகர் என்பவருக்கு போன் செய்து தனது தந்தையை பார்க்கும்படி கூறியுள்ளார்.

அதன்படி சுதாகர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, கிருஷ்ணமூர்த்தி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சுதாகர் தனது நண்பரிடம் தெரிவித்தார். அதன்படி  வெளியூரில் இருந்த குடும்பத்தினர் சென்னை வந்தனர். அதேநேரம் சம்பவம் குறித்து சுதாகர் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கிருஷ்ண மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய போது, கிருஷ்ணமூர்த்தி கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், அதில் பல லட்சம் வரை பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi