சேலம்: சேலம் மாநகர பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சியின் பதிவு பெற்ற கட்டிட வரைபட வரைவாளர் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது, அதற்குரிய கட்டண தொகை செலுத்தியதற்கான ரசீதையும் இணைக்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சியின் அனுமதிபெற்ற கட்டிட வரைபட இன்ஜினியர் ஒருவர் போலி கட்டண ரசீது மூலம் விண்ணப்பித்து, கையாடல் செய்தது உறுதியானது.
இந்த கையாடலுக்கு மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பணியாற்றி வந்த உதவியாளர் விஜய்சங்கர், இளநிலை உதவியாளர் தனபால், தூய்மைபணியாளர் சுரேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்ததும், ரூ.81 லட்சத்திற்கு மேல் கையாடல் நடந்துள்ளதும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இவர்களுக்கு ஏ2 மெமோ வழங்கப்பட்டு ரூ.81 லட்சம் 3 பேரிடம் இருந்தும் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக இருந்த மேற்கண்ட 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மோசடியில் ஈடுபட்ட வரைபட இன்ஜினியர் மீது போலீசில் புகார் அளிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.