சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி

சென்னை: பல்வேறு முறைகேடு மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025 வரை நீட்டித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு செலவில் அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்படுத்தியதாகவும், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி அதில் பல்வேறு நபர்களை பங்குதாரராக இணைத்துள்ளதாகவும், அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் பங்குதாரராக இருந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும், பெரியார் பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி பட்டியலின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ₹2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2021ல் துணைவேந்தராக பொறுப்பேற்ற ஜெகநாதன் பதவிக்காலம் இன்றுடன்( ஜூன் 30) முடிகிறது. இதனால் ஜெகநாதனு, தனது பதவிக்காலத்தை நீட்டிக்க செய்யும் வகையில், ஆளுநர் மாளிகையில் காய்நகர்த்தி வந்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதே சமயம், கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இவருக்கு, பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 500 பக்கங்கள் கொண்ட மனுவை அனுப்பினர். கடந்த 24ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய விடுதலை சிறுத்தை எம்எல்ஏ ஷாநவாஸ், சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ,”சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும். உயர்கல்வித்துறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது’ என கூறி இருந்தார்.

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025 மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தனி அறையில் ஆளுநர் ஆலோசனையால் சர்ச்சை
ைகது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில், துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து பேசுவதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த ஜனவரி மாதம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். பின்னர் துணைவேந்தரின் அறைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, துணைவேந்தர் மீது தற்போது போடப்பட்டுள்ள வழக்கின் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த ஆளுநர், இந்த விவகாரத்தில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும், தைரியமாக வழக்கை எதிர்கொள்ள அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. சுமார் 25 நிமிடத்திற்கு நடந்த இந்த சந்திப்பின் போது, ஆளுநர் மற்றும் துணைவேந்தர் ஆகியோர் மட்டுமே அறையில் இருந்துள்ளனர். துணைவேந்தருக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிக்கும் வகையிலேயே, ஆளுநரின் வருகை மற்றும் ஆலோசனை கூட்டம் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

புதிய துணை வேந்தர் காலம் தாழ்த்திய ஆளுநர்
ஜெகநாதன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணிகளை பல்கலைக்கழக நிர்வாகம் தொடங்கியது. குறிப்பாக, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் இடம்பெற, சிண்டிகேட் சார்பில் முன்னாள் துணைவேந்தர் தங்கராசு மற்றும் செனட் சார்பில் பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, அதன் விவரம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தேடுதல் குழுவின் அமைப்பாளரை நியமிக்காமல், ஒரு மாதத்திற்கும் மேலாக ஆளுநர் மாளிகை காலம் தாழ்த்தி வந்தது.

முறைகேடுகள் ஏராளம்
துணைவேந்தராக ஜெகநாதன், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதவியேற்றார். அப்போது முதல் தற்போது வரை, அவர் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்கள் தொடர்கிறது. பல்கலைக்கழகத்திற்கான உபகரணங்கள் கொள்முதலில் ஊழல், பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாதது, விதிமுறைகளை மீறி தனிப்பட்ட பயணங்களுக்கு பல்கலையின் பணத்தை செலவழிப்பது, அரசின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கியது, தொழிலாளர்கள், ஆசிரியர்களை மிரட்டி மெமோ கொடுப்பது, பணியிடை நீக்கம் செய்வது, சங்க நிர்வாகிகளை பழிவாங்குதல், சாதிரீதியாக செயல்படுதல், தன்னிச்சையான செயல்பாடுகளால் பல்கலையில் தொடர்ந்து அசாதாரண சூழலை உருவாக்குவது என்று சர்ச்சைகளும், புகார்களும் ஏராளமாக உள்ளது.

நாளை முதல் தொடர் போராட்டம்: பேராசிரியர்கள், தொழிலாளர்கள் அறிவிப்பு
பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, தமிழக ஆளுநர் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். தற்பொழுது 70 வயதை அடையவிருக்கும் துணைவேந்தருக்கு, மேலும் பணி நீட்டிப்பு வழங்குவது, திறமையானவர்களின் குரல்வளையை நெறிப்பது போல உள்ளது. ஆளுநரின் இந்த செயல், தமிழக அரசுக்கு சவால் விடுப்பது போல உள்ளது. தமிழகத்தை சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும். பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள், விதிமுறை மீறல்கள், பட்டியல் இனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு பல்வேறு கண்டனங்களை சந்தித்து வரும் துணைவேந்தருக்கு, பணி நீட்டிப்பு வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசு 2 முறை, பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய அறிவுறுத்தியும், அதை மதிக்காமல் தமிழக அரசுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில், அவரை பணியிலிருந்து விடுவித்தார். பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு, பெரியார் பல்கலைக்கழகத்தை பாழ்படுத்தி வரும் ஜெகநாதனுக்கு, பதவி நீட்டிப்பு கொடுத்ததன் மூலம், இந்த ஊழலுக்கு எல்லாம் ஆளுநர் துணை போகிறாரா? என்பதை அறிய விரும்புகிறோம். தமிழக அரசு துணைவேந்தரை விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி எங்களது கூட்டியக்கம் சார்பில் சட்ட வழியிலும், அறவழியிலும் மிகப்பெரிய போராட்டங்களை, வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்க உள்ளோம். மேலும் தமிழக அரசு, இவர் மீதான கிரிமினல் வழக்குகளை துரிதப்படுத்தி, இவருக்கும் இவருடைய கூட்டாளியான முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கும் உரிய தண்டனையை பெற்று தரவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளியாக இருந்தாலும் பதவி நீட்டிப்பு; ஆளுநரின் இந்துத்துவா அரசியல் மாணவர் சங்கம் கண்டனம்
இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் சம்சீர் அகமது, செயலாளர் அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் மீது, 6 குற்றச்சாட்டுகளும், பதிவாளர் தங்கவேல் மீது 8 குற்றச்சாட்டுகளும், தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி மீது 8 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதன் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். தற்போது துணைவேந்தரின் பதவி காலம் முடிந்து விட்ட நிலையில், அவரை மாற்றாமல் பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாஜ, ஆர்எஸ்எஸ்சுக்கு ஆதரவாக செயல்படும் நபர் குற்றவாளியாக இருந்தாலும், அவருக்கு பணிநீட்டிப்பு வழங்குவது ஆளுநரின் இந்துத்துவா அரசியலை முன்னிறுத்துகிறது. குற்றவாளியாக கருதப்படும் ஜெகநாதனுக்கு பதவிக்காலம் நீட்டித்திருப்பதை திரும்ப பெற வேண்டும்,’என வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சோழவரம் அருகே குளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்