Monday, July 1, 2024
Home » சேலத்தில் ஓடும் ரயிலில் ஏறியபோது தண்டவாளத்திற்குள் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப்.,வீரர்

சேலத்தில் ஓடும் ரயிலில் ஏறியபோது தண்டவாளத்திற்குள் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப்.,வீரர்

by Lakshmipathi

*கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியில் இழுத்து தூக்கினார்

சேலம் : சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் ஏறிய போது, தண்டவாளத்திற்குள் கால் தவறி விழுந்த இளம்பெண்ணை வௌியில் இழுத்து ஆர்பிஎப் வீரர் காப்பாற்றினார்.
கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து, கேரள மாநிலம் கண்ணூருக்கு சேலம் வழியே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (16527) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று அதிகாலை 1 மணிக்கு, சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

அப்போது ரயிலில் இருந்த சில பயணிகள் கீழே இறங்கி தண்ணீர் பாட்டில், நொறுக்குத்தீனி போன்றவற்றை வாங்கிக் கொண்டு மீண்டும் ரயிலில் ஏறினர். 3 நிமிடத்தில் ரயில் புறப்பட்டது. அப்போது பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள், ஓடிச்சென்று ரயிலில் ஏறினர். ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது, ஒரு பெட்டியில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறிய நிலையில், ஒரு பெண் திடீரென படிக்கட்டில் கால் தவறி, பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையே தண்டவாளத்திற்குள் விழுந்தார்.

அந்த நேரத்தில், பிளாட்பாரத்தில் நின்றிருந்த சேலம் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) வீரர் அஜித், ஓடிச்சென்று தண்டவாளத்திற்குள் விழுந்த பெண்ணை வெளியே இழுத்து காப்பாற்றினார். சில நொடிகளில் இந்த சம்பவம் நடந்தேறியது. பிறகு அந்த பெண்ணுடன் வந்திருந்த 2 பயணிகளும், அவரை ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் ஸ்மித் தலைமையிலான போலீசார் வந்து விசாரித்தனர். அதில் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்தவர், கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் காயத்ரிகோயில் பகுதியை சேர்ந்த தேவராஜ் மகள் ஸ்மிருதி (26) என்பதும், யஷ்வந்த்பூரில் இருந்து கோழிக்கோடு செல்வதற்காக ரயலில் பயணித்ததும், சேலத்தில் இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு மீண்டும் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்ததும் தெரியவந்தது.

அவரது இடது காலில் லேசான காயம் ஏற்பட்டிருந்ததால், ரயில்வே ஸ்டேஷனில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அடுத்து வந்த ரயிலில் ஸ்மிருதி மற்றும் உடன் வந்த 2 பேரை கோழிக்கோட்டிற்கு ஆர்பிஎப் போலீசார் அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை, கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ஆர்பிஎப் போலீஸ்காரர் அஜித்தை, தெற்கு ரயில்வே ஆர்பிஎப் தலைமை பாதுகாப்பு ஆணையாளர் ஈஸ்வரராவ், சேலம் ஆர்பிஎப் கமிஷனர் சவுரவ்குமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பாராட்டினர். இதனிடையே இளம்பெண்ணை காவலர் அஜித் காப்பாற்றிய வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. அதிலும் ஆர்பிஎப் வீரரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi