சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இப்பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகம் வேந்தர் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் துணைவேந்தர் ஆகிய பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளனர்.
இந்த சூழலில் ஆளுநரை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அத்துடன் கைபேசி எடுத்து வருவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்து துறைகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.