Tuesday, September 17, 2024
Home » சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவு..!!

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவு..!!

by Lavanya
Published: Last Updated on

சென்னை: சேலம் பெரியார் பல்கலை கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வருபவர் ஜெகநாதன். இவர் மீதும், முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக பணியாளர்கள் முன் வைத்தனர். குறிப்பாக தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதிகளை மோசடி செய்ததாக ஜெகநாதன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி கருப்பூர் காவல்துறையினரால் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். 8 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே தொடர்ந்து நிதி முறைகேடு புகார்கள் எழுந்து வந்ததால், ஜெகநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், துணை வேந்தர் ஜெகநாதனின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு மே 19ம் தேதி வரை நீட்டித்து கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

ஜெகநாதனின் பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அவர் பதவியேற்றபின் கடந்தகால செயல்பாடுகள் குறித்து புலம்பியும், ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார். பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 4 பேரை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்தார். இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 4 பேரை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

4 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததால் தொழிலாளர் சட்டத்தின்படி குற்றம் இழைத்ததாக அறிவிக்கப்பட்டது.துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டது. துணைவேந்தர் ஜெகநாதன் முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் மீது வழக்கு தொடர ஆணை பிறப்பிக்கப்பட்டது. உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர சேலம் தொழிலாளர் கூதவி ஆணையருக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தொழிலாளர் சட்டத்தின்படி, குற்றமிழைத்தவர் என அரசாணை வெளியிட்டு, குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

8 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi