சேலம் : தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து 4 நாட்கள் ஆகியும் பெரியார் பல்கலை கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாததற்கு பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார் பல்கலை கழக ஆட்சிமன்ற குழு கூட்டமும் உறுப்பினர் பதவிக்கான தேர்தலும் ஒன்றாக சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பேராசிரியர்கள் பெரியார் பல்கலைகழக பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்த பின்னரும் இதுவரை பணியிடை நீக்கம் செய்யாமல் அவருக்கு மருத்துவ விடுப்பு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆட்சிமன்ற குழு உறுப்பினர் தேர்தலை அவசர அவசரமாக நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பி பொருளே இல்லாமல் கூட்டம் நடத்துவதற்கும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதற்கு பெரியார் பல்கலை கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிலளிக்க மறுத்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து பல்கலை கழக ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.