ஏல சொத்துக்கான விற்பனை சான்றிதழை பதிவு செய்ய முன்தேதியிட்டு 11% கட்டணம் வசூலிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: ஏலம் மூலம் வாங்கிய சொத்துக்களுக்கான விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் அடமானமாக வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் மூலம் வாங்கியவர்கள் அதற்காக வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழை பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்ய விண்ணப்பித்தனர். இதில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. சிலரின் விற்பனை சான்றை பதிவு செய்ய 7 சதவீத முத்திரைத்தாளும், 4 சதவீத பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டன.

பதிவு செய்யக் கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், சில விண்ணப்பங்கள் மீது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்தும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ஏலம் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கான விற்பனைச் சான்றிதழை பதிவு செய்ய முத்திரை தாள் கட்டணம் செலுத்தும்படி நிர்ப்பந்திக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பதிவு செய்வதற்காக 11 சதவீத கட்டணம் வசூலிப்பது என்று அரசு முடிவெடுத்து கடந்த மார்ச் 23ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணங்களை நேரடியாக வசூலிக்க முடியாததால், சான்றிதழை பதிவு செய்வதற்கான கட்டணம் என்று மறைமுகமாக 11 சதவீத கட்டணம் வசூலிக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது. இந்த வழக்கில் மனுதாரர்களின் விற்பனைச் சான்றிதழ்களை கட்டணம் செலுத்தும்படி நிர்ப்பந்திக்காமல் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தை 6 சதவீத வட்டியுடன் மனுதாரர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related posts

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை

பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?