சைதாப்பேட்டையில் பரபரப்பு; பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு: சிசிடிவி மூலம் பைக் ஆசாமிகளுக்கு வலை

சென்னை: சைதாப்பேட்டையில் கோயிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் 7 சவரன் செயினை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்தவர் பூங்கொடி(46). இவர், நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள சவுந்தரீஸ்வரர் கோயிலுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் பூங்கொடி கழுத்தில் இருந்த 7 சவரன் செயினை பறித்தனர். அப்போது அவர் செயினை விடாமல் பிடித்த போது, நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ நல்வாய்ப்பாக அவர் மீது மோதாமல் நின்றது. இதனால் அவர் உயிர்தப்பினார்.

தனது 7 சவரன் செயினை வழிப்பறி கொள்ளையர்களை பறித்து சென்றதால் பூங்கொடி சாலையிலேயே கதறி அழுதார். பிறகு சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று பைக்கில் தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சைதாப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்