Thursday, September 19, 2024
Home » தன்னை இகழ்ந்தவனையும் தன் பக்தனாக மாற்றிய சாய் பாபா..!!

தன்னை இகழ்ந்தவனையும் தன் பக்தனாக மாற்றிய சாய் பாபா..!!

by Nithya

“சப்கா மாலிக் ஏக்” அதாவது “எல்லோருக்கும் இறைவன் ஒருவனே” இந்த வரியை அடிக்கடி “ஷீரடியில்” வாழ்ந்த “ஸ்ரீ சாய் பாபா” தன் பக்தர்களிடம் கூறுவார். இறைவனின் தூதரராக கருதப்படும் பாபா இன்றும் தன்னை வழிபடுகிறவர்களுக்கு அருள்புரிகிறார். அவரை வெறுப்போர்கள் யாரையும் அவர் வெறுத்ததில்லை. அப்படி தன்னை இகழ்ந்த ஒருவனை தனது பக்தனாக மாற்றிக்கொண்ட ஒரு உண்மை சம்பவம் தான் இது.

சென்னையில் வாழ்ந்து வந்த நபர் ஒருவர், சிறு வயதிலிருந்தே “கடவுள் இல்லை என்ற கொள்கைகளால்” ஈர்க்கப்பட்டு, அதன் காரணமாக இறைமறுப்பாளராகவும், துறவிகளையும், ஞானிகளையும் குறைத்து பேசும் குணம் கொண்டவராக இருந்தார். ஒரு முறை தன் உறவினர் ஒருவர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, தன் இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது ஒரு கடுமையான விபத்தை சந்தித்தார். உயிரையே இழந்திருக்கக்கூடிய அந்த விபத்தில், அவரின் ஒரு கால் மட்டும் கடும் சேதமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை வைத்தியம் செய்த மருத்துவர்கள் அவரின் அந்த கால் கடுமையாக சேதம் அடைந்திருப்பதால் அவரால் முன்பு போல் நடக்க முடியாது என்றும், பாதிப்பு தீவிரமானால் அவரின் அந்த ஒரு காலையே எடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்தனர்.

இதனால் நொந்து போன அவரை காண்பதற்கு அவரின் நண்பரும், சாய் பாபாவின் பக்தருமான ஒருவர் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அந்த நண்பர் வைத்திருந்த “சாய் பாபாவின் சரிதம்” என்ற புத்தகத்தைக் கண்டு, தான் மருத்துவமனையில் நேரம் போக்க அந்த புத்தகத்தை தான் படிக்கத்தருமாறு கேட்டு, தன் நண்பரிடமிருந்து பெற்றுக்கொண்டார். அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்த அந்த இறை மறுப்பாளர் தன்னை அறியாமல் சாய்பாபாவின் பக்தராகவே மாறினார். தன் கடந்த கால தவறுகளுக்காக பாபாவை நினைத்து மனம் வருந்தினார். இதற்கிடையில் அவரின் அந்த கால் காயங்கள் நன்கு ஆறின. இப்போது மீண்டும் அவரை பரிசோதித்த அந்த மருத்துவர்கள் அவரின் அந்த கால் நன்றாக குணமடைந்து விட்டதாகவும், இனி அவர் பழைய படி நடக்க முடியும் என்று கூறினர்.

இது சாய்பாபாவின் கருணை என்று மகிழ்ந்த அவர், அந்த மருத்துவமனையிலிருந்து புறப்படும் சமயத்தில், அவர் விபத்தில் சிக்கிய போது, அவரிடம் இருந்த பொருட்களை மீண்டும் அவரிடம் ஒப்படைத்தனர். அதில் தான் விபத்தில் சிக்கும் முன்பு, தான் ஒரு திருமணத்தில் பெற்றுக்கொண்ட தேங்காய்ப்பையும் இருந்தது, அதை சற்று உற்று நோக்கியபோது அந்த பையில் “தன் கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் சாய் பாபாவின் படமிருந்ததை” அப்போது தான் அவர் கவனித்தார். பாபாவின் அருள் தனக்கு முன்பே இருந்திருப்பதால் தான், அந்த விபத்தில் உயிரிழக்காமல் காலில் காயம் ஏற்பட்டதோடு தப்பிப்போம் என்று எண்ணி அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். ஓம் சாய் ராம்.

You may also like

Leave a Comment

nine − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi