திருவள்ளூர்: சென்னை அடுத்த பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்கியல் மற்றும் நிதித்துறை, பின்டெக் கிளப் மற்றும் இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை ‘குவாண்டம் குவாசர் 2.0’ என்ற தலைப்பில் நடத்தின.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் வி.சாய் சத்யவதி, முதல்வர் மாலதி செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 70 கல்லூரிகளைச் சேர்ந்த 1,600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வினாடி வினா, ரங்கோலி, கட்டுரை, மௌன நாடகம், குழு நடனம் உள்ளிட்ட 18 போட்டிகள் நடைபெற்றன. சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுக் கேடயங்களும் வழங்கப்பட்டன.