சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை நடந்து வருகிறது. தினமும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்து வருகிறது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடந்த 4 நாட்களாக தினசரி பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. நேற்று வரை சபரிமலையில் 26.60 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை(27ம் தேதி) நடைபெறுகிறது. நாளை காலை 10.30 மணிக்கும், 11.30க்கும் இடையே மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதனால் 27ம் தேதி நெய்யபிஷேகம், காலை 9.45 மணியுடன் நிறுத்தப்படும். வழக்கமாக காலை 11.30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும்.
மண்டல பூஜையையொட்டி இன்று சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இந்நிலையில் சபரிமலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜை தரிசனத்திற்கான முன்பதிவு 70 ஆயிரமாக குறைக்கபட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.