திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானத்தில் உண்டியலை உடைத்து பணம் திருடிய தென்காசி கீழ் சுரண்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை பம்பை போலீசார் கைது செய்தனர். சபரிமலை கோயில் சன்னிதானத்தை சுற்றிலும் ஏராளமான உண்டியல்கள் உள்ளன. இந்தநிலையில் கடந்த மாதம் ஸ்ரீகோயிலின் முன்புறமுள்ள ஒரு சிறிய உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதைப் பார்த்த கோயில் ஊழியர்கள் உடனடியாக சன்னிதானம் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். திருடனைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர் சன்னிதானம் மற்றும் பம்பையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பரிசோதித்தனர். இந்த விசாரணையில் திருட்டை நடத்தியது எல்லா மாதமும் சபரிமலையில் வேலைக்கு வரும் தென்காசி மாவட்டம் கீழ் சுரண்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரியவந்தது. கீழ் சுரண்டையில் பதுங்கி இருந்த சுரேஷை கேரள போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் பம்பைக்கு கொண்டு சென்றனர்.