கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் சுமார் 12 முதல் 15 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் 18ஆம் படியேறி, ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். எனினும், ஒரு சில பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாமல் அடிவாரத்தில் உள்ள பம்பையிலே தங்களது விரதத்தை முடித்து வீடுகளுக்கு திரும்புவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வரலாறு காணாத பக்தர்கள் கூட்டத்தால் எரிமேலி , நிலக்கல் பம்பை போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 95,000 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் வருகை 40,000 ஆக சரிவடைந்துள்ளது. நாளை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், 13ம் தேதி பந்தளத்தில் இருந்து தங்க ஆபரண ஊர்வலம் புறப்பாடும் நடைபெற உள்ளது.