டெல்லி: ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்ததால் உலக எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றம் ஏற்பட்டு கடும் விலையேற்றம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்து இருக்கிறது. பெட்ரோலி அமைச்சகம் அந்த துறைக்கான நாடாளுமன்ற குழுவிடம் விளக்க அறிக்கை ஒன்றை தந்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாடு மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்ததாக அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இதனால் ரஷ்யா தனது கச்சா எண்ணெயை பல நாடுகளுக்கு விற்க முடியாத நிலை ஏற்பட்டதால் பற்றாக்குறை காரணமாக அதன் விலை 30 முதல் 40 டாலர் வரை உயர்ந்து உலக எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றம் ஏற்பட்டு மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்ய இந்தியா எடுத்த முடிவால் உலக சந்தையில் சமநிலை ஏற்பட்டதாகவும் இதனால் பெரும் குழப்பம் தவிர்க்கப்பட்டதோடு இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு தடுக்கப்பட்டதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.