காரைக்கால்,ஜூலை29: கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி இலவச பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனிடம் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜிஎன்எஸ் ராஜசேகரன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்காலில் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி புதுவை அரசால் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் இலவசமாக கிராமப்புறங்களில் இருந்து நகரப் பகுதிக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர், பண்டாரவடை, முப்பைதங்குடி, தென்னங்குடி கிராம பகுதிகள் வழியாக சென்று கொண்டிருந்த இலவச பேருந்துகள் கடந்த எட்டு மாதங்களாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பல கிலோமீட்டர் நடந்து சென்று பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை மாணவ மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி கூடுதல் இலவச பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.