பொன்னேரி: திருப்பாலைவனத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஒன்றிய அரசு ஆய்வு குழுவினர் பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்தாய்வு நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாலைவனத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஒன்றிய அரசு ஆய்வு குழுவினர் நேற்றுமுன்தினம் மாலை நேரில் வந்து பார்வையிட்டு அப்பகுதி மக்களுடன் கலந்தாய்வு நடத்தினர்.
அப்போது, திருப்பாலைவனம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். பின் நடைபெற்று முடிந்த திட்டப் பணிகள் குறித்தும், செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த ஆய்வின்போது, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன், துணைத் தலைவர் சுகுணா கோபி, வார்டு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.