இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சகோதரர் விகாஸ், தனது தாயார் சரோஜ் கோலியின் உடல்நிலை குறித்து இணையத்தில் பரவி வரும் தவறான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எங்கள் அம்மா உடல் நடத்துடன் நலமாக உள்ளார் என விகாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
மேலும் இந்தச் சவாலான நேரத்தில் கோஹ்லியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும், அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிசிசிஐ வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில் விராட் கோலியின் தயார் உடல்நிலை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து விராட் கோலியின் சகோதரர் விகாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “அனைவருக்கும் வணக்கம், எங்கள் அம்மாவின் உடல்நிலை குறித்து இதுபோன்ற பொய்யான செய்திகள் பரவி வருவதை நான் கவனித்தேன்.
எங்கள் அம்மா முற்றிலும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறேன். மேலும், இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அனைவரையும் மற்றும் ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று விகாஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது தாயார் குறித்து இணையதளங்களில் வெளியான வதந்திகளுக்கு விகாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.