சபரிமலையில் மீண்டும் இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி: கேரள சைபர் கிரைம் போலீசார் வழக்கு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2018ம் ஆண்டுக்கு முன்பு வரை 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இளம்பெண்கள் சபரிமலை செல்ல எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2018ல் தீர்ப்பளித்தது. சபரிமலை சென்ற இளம்பெண்கள் பலர் எதிர்ப்பு காரணமாக பாதி வழியிலேயே திரும்பினர். இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கனகதுர்கா மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் தரிசனம் செய்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து கேரளா முழுவதும் கலவரம் வெடித்தது. இதற்குப் பின்னர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேறு எந்த இளம்பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யவில்லை. இளம்பெண்கள் தரிசனத்திற்கு சென்றால் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீசாரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சபரிமலையில் மீண்டும் 2 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக இன்ஸ்டாகிராமில் தகவல் பரவி வருகிறது. 18ம் படி அருகே நின்றுகொண்டு அந்த இளம்பெண்கள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படமும் அதில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த போட்டோ உண்மை இல்லை என்றும், இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு வரவில்லை என்றும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பத்தனம்திட்டா சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். போட்டோவையும், தகவலையும் பரப்பியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா