விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மொளசூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இடைதரகர்கள், டிரைவர்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,20,920 ரொக்கபணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ஓட்டுநர்உரிமம், வாகன சான்றிதழ் புதுப்பிப்பு உள்ளிட்டவைகளுக்கு நேரடியாக பணம் வாங்கினால் சிக்கிக் கொள்வோம் என்பதால் கூகுள்பே மூலம் அலுவலர்கள் லட்சக்கணக்கில் லஞ்ச பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தராஜ் மற்றும் அலுவலக ஊழியர்கள் 10 பேர், இடைதரகர்கள், தனிநபர்கள் 27 பேர் என மொத்தம் 38 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.3.55 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக சோதனையின்போது ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ், துணை தலைவர் சந்திரபோஸ், ஊராட்சி செயலாளர் சஜீத் மற்றும் சில ஒப்பந்ததாரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.