சென்னை: ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனுக்களுக்கு வரும் 24ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு, அக்டோபர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணி வகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தரப்பிலும், திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தரப்பிலும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த 9 மற்றும் 14ம் தேதிகளில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவிடக்கோரி ஆர்.எஸ்.எஸ்சின் திருப்பூர் செயலாளர் ஜோதி பிரகாஷ் மற்றும் திண்டுக்கல் இணைச் செயலாளர் சேதுராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் வரும் 24ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.