ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் செங்குடி விலக்கில் இருந்து எட்டியதிடல் வழியாக முத்துப்பட்டிணம் செல்வதற்கு சாலை வசதி உள்ளது. இந்த சாலையை சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித வனத்து அந்தோணியார் ஆலயத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர். ஆகையால் சேதமடைந்த இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.