புழல்: நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில், புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காக்களை சுதர்சனம் எம்எல்ஏ திறந்து வைத்தார். நாரவாரிக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவிக தெரு, பிள்ளையார் கோயில் தெரு ஆகிய 2 இடங்களில் உள்ள 2 சிறுவர் பூங்காக்கள், பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டன. இவற்றின் திறப்புவிழா நேற்று முன் தினம் மாலை நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் தமிழரசி தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் விப்ரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புதுப்பிக்கப்பட்ட 2 சிறுவர் பூங்காக்களையும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில், செங்குன்றம் பேரூர் திமுக செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி தூய்மை பணி ஆய்வாளர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.