வாலாஜா: வாலாஜா அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.5 ேகாடி மோசடி செய்த செயலாளர், கேஷியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் நகர கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சங்கர் என்பவர் செயலாளராகவும், பாரதி என்பவர் கேஷியராகவும் உள்ளனர். இந்த சங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இங்கு விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சங்கத்தில் ரூ.100 கோடிக்கு மேல் ‘பிக்சட் டெபாசிட்’ செய்துள்ளனர்.இந்நிலையில் இங்கு பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனால் சில தினங்களாக வேலூர், ராணிப்பேட்டையை சேர்ந்த கூட்டுறவு அதிகாரிகள் வந்து சங்கத்தில் ஆய்வு செய்தனர். சங்க அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று சேமிப்பு பாஸ் புத்தகம் மற்றும் பிக்சட் டெபாசிட் பாண்டு இருப்பு விவரங்களை சரிபார்த்தனர்.
இதில் பெரும்பாலானோர் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், கூட்டுறவு வங்கி செயலாளர் சங்கர், கேஷியர் பாரதி ஆகியோர், சங்க உறுப்பினர்களின் பெயர்களில் இருந்த பிக்சட் டெபாசிட்டை முதிர்ச்சி தேதிக்கு முன்பாகவே கணக்கை முடித்து, உறுப்பினர்களின் கையொப்பத்தை போலியாக போட்டு பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. அதன்படி ரூ.5 கோடி வரை கையாடல் செய்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்த மோசடி நடந்துள்ளது என்பதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. நேற்று கூட்டுறவு இணை பதிவாளர் நாகராஜன் விசாரணை நடத்தினார். அப்போது வங்கி செயலாளர் சங்கர், கேஷியர் பாரதி ஆகியோர் ேமாசடிசெய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்றிரவு 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் செயலாளர் சங்கர், கேஷியர் பாரதி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன் தலைமறைவாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.