பீகாரில் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம்: போலீசில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ பகீர் புகார்

பாட்னா: பீகாரில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க தனக்கு ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர், அதே கட்சியை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ சஞ்சீவ் குமார் மீது போலீசில் புகார் செய்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் திடீரென இக்கூட்டணியிலிருந்து விலகி பாஜவில் இணைந்தார் நிதிஷ்குமார். ஏனென்றால் ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட நிலையில் இது, தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 129 உறுப்பினர்கள் நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தள – பாஜ கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதன் மூலம் அவரது அரசு தப்பியது. இந்நிலையில், நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க, தனக்கு ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர் புகார் அளித்துள்ளார். “நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வாக்களிக்கும்படி எங்கள் கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் குமார், எங்கள் கட்சியில் உள்ள மற்ற எம்எல்ஏக்களிடம் பேரம் பேசினார். எனக்கு ரூ.10 கோடி அல்லது அமைச்சர் பதவி தருவதாகவும் அந்த பேரம் நடந்தது. இது தொடர்பாக பொறியாளர் சுனில் என்னை கடந்த 10ம் தேதி தொடர்பு கொண்டு, முதல்கட்டமாக ரூ.5 கோடியும், வாக்கெடுப்பு முடிந்த பிறகு ரூ.5 கோடியும் தருவதாக கூறினார். வாக்கெடுப்பில் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பிமா பார்தி, திலீப் ராய் கடத்தப்பட்டனர். இதில் சஞ்சீவ் குமார், சுனில் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்