இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கடந்த 20ம்தேதி கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி தேவி தலைமையிலான போலீசார் கடந்த 2 நாளாக அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை முடிந்து நேற்று மதியம் 2 மணிக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து, வாங்கல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஒரு வாரம் காவலில் விசாரிக்க வாங்கல் போலீசார் மனு அளித்தனர். மாலை 6 மணி வரை இந்த மனு மீதான விசாரணை நடந்தது. ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கிய நீதிபதி பரத்குமார், இன்று மாலை 5 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து வாங்கல் போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கரை இரவு 7.30 மணியளவில் வாங்கல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.