‘என்ன பேச்செல்லாம் கேட்க வேண்டியிருக்கு’ ரூ.50 ஆயிரம் கடனுக்காக மனைவி குறித்து ஆபாச பேச்சு

*தொழிலாளி தற்கொலை முயற்சி

களக்காடு :களக்காடு அருகே வாங்கிய கடனுக்காக மனைவியை அவதூறாக பேசியதால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம், நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (32). தொழிலாளியான இவர் தனது குடும்ப செலவுக்காக கடந்த ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் ரூ.2,500 வட்டி செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இந்த மாதம் வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து அந்த பெண் இசக்கி வீட்டிற்கு சென்று, அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம் (25) வட்டி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி எஸ்தர் மரியா தனது கணவர் இசக்கியிடம் கூறினார். இதனைதொடர்ந்து இசக்கி அந்த பெண்ணிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு அந்த பெண் ஆபாசமாக பேசி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்து இசக்கி களக்காடு போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே மனைவியை அந்த பெண் ஆபாசமாக கூறியதால் இசக்கி மனம் உடைந்தார். நேற்று முன்தினம் இரவில் இசக்கி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு