கரூர்: ரூ.100 கோடி நிலம் அபரிப்பு வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் இடைக்கால முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது கரூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி, மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக அளித்துள்ள புகார் மீதான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயபாஸ்கர் உட்பட 3 பேர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல், மோசடி செய்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தொடர்ந்து தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் தரப்பில், இடைக்கால முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1ம்தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று மதியம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சண்முகசுந்தரம், அதன்மீதான தீர்ப்பை இன்று (4ம் தேதி) அளிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.