கரூர்: ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் மீது 6 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனது ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், தனது மனைவி, மகள் ஆகியோர்களை மிரட்டி, மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ம்தேதி புகார் அளித்திருந்தார். இதேபோல், கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் என்பவரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், டவுன் காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவரது முன்ஜாமீன் மனு கடந்த ஜூன் 25ம்தேதி கரூர் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் புகார்தாரர் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்டவர் என்பதால் வாங்கல் போலீசார் விஜயபாஸ்கர் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.