ரவுடி கொலைக்கு பழிக்குப்பழியாக மேளம் வியாபாரி வெட்டி கொலை: 7 பேருக்கு வலை

பெரம்பூர்: புளியந்தோப்பு சிவராஜபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் முருகன் (41). இவர், தனது வீட்டின் 2வது மாடியில் மேளம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி இலக்கியா என்ற மனைவியும், 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் முருகன் தனது வீட்டில் மேளம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 7 பேர் மேளம் வாங்க வேண்டும் என்று கூறி முருகனின் வீட்டிற்கு வந்துள்ளனர். 2வது மாடியில் இருந்த முருகனிடம் மேளம் வாங்குவது போல பேசிக் கொண்டே திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அங்கிருந்து அந்த கும்பல் தப்பியது. முருகனின் அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், முருகனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் நேற்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி கொண்டித்தோப்பு அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடியான முருகன் (35) என்பவரை தற்போது உயிரிழந்த முருகன் மற்றும் அவரது தம்பி வேலு ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக கொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த முருகனின் ஆட்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பிய 7 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

‘மூன்றில் ஒரு பங்கு’

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது