சென்னை: தமிழ்நாட்டில் தாமரை மலர இடமே இல்லை 40க்கு 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை விசிக தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை நாம் ஒரு போதும் பொருட்படுத்துவது இல்லை. 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி இந்தியாவை அதலபாதாளத்தில் சரிய வைத்துள்ளது. ஜூன் 4ம் தேதி, இந்தியாவை சூழ்ந்த இருள் அகல உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி மலர உள்ளது. தாமரை தமிழ்நாட்டில் மலர இடமே இல்லை. 40க்கு 40 என திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.