தர்மபுரி: ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் தர்மபுரி தனியார் மகளிர் கல்லூரி சார்பில், விண்வெளி கண்காட்சி மற்றும் செயல்முறை விளக்கம் நேற்று நடைபெற்றது. இஸ்ரோவின் சதீஸ் தவான் விண்வெளி நிலைய இணை இயக்குனர் சையத் ஹமத் தலைமை வகித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விண்வெளி துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. இஸ்ரோவுடன் ஏராளமான நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 97 செயற்கைக்கோள்கள் இதுவரை ஏவப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நவம்பர் இறுதியில், பிஎஸ்எல்வி ராக்கெட்(கமர்ஷியல்) ஏவப்பட உள்ளது. டிசம்பரில் ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட 2 ராக்கெட்டுகள் ஏவப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுகளில், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவப்படும் பகுதியாக மாறும். செயற்கை கோள்கள் மூலம் பூகம்பம், வனப்பகுதி, ஓசோன் மண்டலங்கள், சிட்டி டெவலப்மென்ட் உள்ளிட்டவை அறிவியல் ரீதியாக கண்காணிக்கப்படுகிறது. வெளிநாட்டினரும் நமது ராக்கெட்டுகளை வணிக ரீதியாக பயன்படுத்த முன் வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.